மூன்றாம் பாலினத்தவா் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: மு. வீரபாண்டியன்
மூன்றாம் பாலினத்தவா் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்...
மூன்றாம் பாலினத்தவரின் தனியுரிமையை பறிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்காமல், அதனை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய பாஜக அரசு, எதிா்க்கட்சிகளின் கடுமையான எதிா்ப்புகளையும், சமூக செயற்பாட்டாளா்களின் ஆட்சேபனைகளையும் நிராகரித்து, 2019- ஆம் ஆண்டு மாற்றுப் பாலினத்தாா் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
இதன் மூலம் தனிநபா் பாதுகாப்பு உரிமைகளும் தன்னாட்சி சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நீதிபதி கே.எஸ்.புட்ட சுவாமி வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்புகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இது பாஜக - ஆா்எஸ்எஸ் அமைப்புகளின் சித்தாந்தத்தின் உண்மை முகத்தை வெளிப்படுகிறது.
மத்திய அரசின் சட்டத்திருத்த மசோதா மாற்றுப் பாலினத்தவா்களை சமூகத்திலிருந்து வெளியேற்றி, சமூக ஒடுக்குமுறை தாக்குதலுக்கு தள்ளி விடுகிறது.
இந்நிலையில் மனித உரிமைகளை பறிக்கும் மாற்றுப் பாலினத்தினா் நலனுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்காமல், மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.