நாராயணபுரம் ஏரியில் மழைநீரை வேகமாக வெளியேற்ற நடவடிக்கை
தாம்பரம் கோட்டத்தில் உள்ள நாராயணபுரம் ஏரி பகுதியில் குழாய்கள் பதித்து மழைநீரை வேகமாக வெளியேற்ற மாவட்ட சிறப்புக் கண்காணிப்பாளர் அமுதா வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
தாம்பரம் கோட்டத்தில் உள்ள நாராயணபுரம் ஏரி பகுதியில் குழாய்கள் பதித்து மழைநீரை வேகமாக வெளியேற்ற மாவட்ட சிறப்புக் கண்காணிப்பாளர் அமுதா வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
தொடர்மழை காரணமாக தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்த மழைநீர், ஏரிகளில் தேங்கிய உபரிநீர் ஆகியவை வடிவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, நாராயணபுரம் ஏரி, உண்மை நகர், சாந்தி நகர், எஸ்.கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிவதை மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அமுதா வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
அப்போது, ஏரியிலிருந்து உபரிநீர் வடிவதற்கு வடிகால்வாயை மேலும் அகலப்படுத்துவது, ஆழப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, சில வடிகால் பகுதிகளில் உள்ள கான்கிரீட் கட்டுமானங்கள் தண்ணீர் வடிவதற்குத் தடையாக இருந்தன. இதனை, உடைத்து கான்கிரீட் கட்டுமான கழிவுகளை வெளியேற்ற அறிவுறுத்தினார். தொடர்ந்து, காந்தி நகர்ப் பகுதியில் நாராயணபுரம் ஏரி உபரிநீர் வடிவதற்குத் தாமதம் ஆனது. இதற்காக, அப்பகுதியில் குழாய்கள் பதித்து வேகமாக மழைநீர் வடிய உரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், மணிமேகலை நகர், ராஜேஸ்வரி நகர், உண்மை நகர் ஆகிய பகுதி மக்கள் மழைநீர் வேகமாக வடிவதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு, இந்தப் பகுதி தாழ்வாக உள்ளது. அதுபோல், இந்த நீர் நாராயணபுரம் ஏரி வழியாக மட்டுமே வடிந்து செல்லமுடியும். இதற்கு சற்று காலதாமதம் ஏற்படும். எனவே, தேங்கியுள்ள மழைநீரை வேகமாக வடிவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமுதா பொதுமக்களிடம் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெகராஜ், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.