தமிழக அரசின் உத்தரவின்பேரில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
மழைக் காலத்தை முன்னிட்டு நோய்களைக் கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கையாக மாவட்டம் தோறும் அரசு மருத்துவமனைகள் சார்பில் மழைக்கால சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதையடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா சதாசிவன் முகாமைத் தொடங்கி வைத்தார்.
மருத்துவக் கண்காணிப்பாளர் பூபதி, ஆர்எம்ஓ வல்லியரசி, ஏஆர்எம்ஓ தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருவாரம் நடைபெறும் மருத்துவ முகாமில் 25 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், மருத்துவர் தலைமையில் 5 குழுக்களாகப் பிரிந்து, செங்கல்பட்டு ஜேசிகே நகர், மகாலட்சுமி நகர், மேலமையூர் சக்திநகர், மாமண்டூர், நெம்மேலி உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு, பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் உஷா சதாசிவன் கூறுகையில், மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம்களை அனைத்துப் பகுதிகளிலும் நடத்துவற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
முதல்கட்டமாக 5 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாமிட்டு, அப்பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் தீனதயாளன் , பிரபாகரன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து முகாமினை நடத்துகின்றனர். ஒரு குழுவுக்கு மருத்துவர், உதவி மருத்துவர், செவிலியர் என 5 பேர் கொண்ட 5 குழுக்களாக பிரித்து அனுப்பியுள்ளோம். இக்குழு தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாகச் சென்று முகாமிட்டு சிகிச்சை அளிக்கும் என்றார்.