காஞ்சிபுரம்

பூந்தமல்லி எம்எல்ஏ மீது தாக்குதல்: தினகரன் ஆதரவாளர்கள் நள்ளிரவில் சாலை மறியல்

DIN

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலையை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி, டிடிவி தினகரன் ஆதாரவாளர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன்பு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். 
திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளவேடு உட்கோட்டை கிராமத்தில் அதிமுக பிரமுகர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு பங்கேற்றுவிட்டு, திருவள்ளூர் நோக்கி எம்எல்ஏ ஏழுமலை வந்து கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் நைனாகண்ணு, வழிமறித்து எம்எல்ஏ ஏழுமலை காரின் மீது உருட்டுக் கட்டையால் தாக்கினார்.
இதில், கார் கண்ணாடி உடைந்து விழுந்ததில், எம்எல்ஏ ஏழுமலையின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், எம்எல்ஏ ஏழுமலையை தாக்கியவரையும், இதற்கு பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, எம்எல்ஏவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்.பி., உறுதி அளித்தார். 
இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
மேலும், மருத்துவமனையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆறுதல் கூறிய டிடிவி தினகரன்: இந்நிலையில், எம்எல்ஏ ஏழுமலையை, டிடிவி.தினகரன் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலையின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். தற்போது, துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவரை மீண்டும் தாக்கியுள்ளனர். முன்னாள் எம்எல்ஏ மணிமாறனின் தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டுகிறேன். 
ஆனால், அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் குறித்து ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றார்.
இதேபோல், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களான தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன், கலைச்செல்வன் உள்ளிட்ட 17 எம்எல்ஏக்களும் டி.ஏ.ஏழுமலையை புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

SCROLL FOR NEXT