கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.7.20 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை ஆட்சியர் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வட்டம், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், தொண்டு அமைப்பினர், கட்சியினர் என பலரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பி உதவி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, வேலைவாய்ப்புத்துறை ஆகியவற்றின் சார்பில் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பருப்பு, பிஸ்கட், குடிநீர், நாப்கின், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன.
அவற்றை ஆட்சியர் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை காலை இரண்டு வாகனங்களில் அனுப்பி வைத்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமுர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.