செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நவீன இதய உள்ளீடு ஆய்வக சிகிச்சைப் பிரிவினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி முறையில் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இருந்து விபத்து மற்றும் இதய நோய் சிகிச்சைக்காக பொதுமக்கள் வருகின்றனர். இந்த மருத்துவமனையில் போதிய இதய ஆய்வு உபகரணங்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மேலும் இதய உள்ளீடுருவி சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் வரை செலவாகக் கூடும். இதனைக் கருத்தில் கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்காக புதிய நவீன இதய ஊடுருவியல் ஆய்வுக் கருவியை வழங்கி பொதுமக்கள் பயனுறும் வகையில் ரூ.5 கோடி செலவில் ஆய்வகப் பிரிவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி முறையில் திறந்து வைத்தார்.
இதனையடுத்து மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷா சதாசிவன், இப்பிரிவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனை துணை முதல்வர் அனிதா, இதய முதன்மை மருத்துவர் ரகோத்தம்மன், மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், மருத்துவக் கண்காணிப்பாளர் சுதாகர், நிலைய மருத்துவ அலுவலர் வள்ளியரசி, நிலைய உதவி மருத்துவ அலுவலர்கள் கந்தன்கருணை, தீனதயாளன் உள்ளிட்டோர், செவிலியர்கள் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், கட்சியின் நகர செயலாளர் செந்தில்குமார், அரிகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
தமிழக அரசின் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக இந்த சிகிச்சையை பொதுமக்கள் பெறலாம். எனவே இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் செங்கல்பட்டு அரசு மருத்துவனையிலேயே இலவசமாக நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான நவீன வசதியுடன் கூடிய ஆய்வுக்கருவி உள்ளதால் நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கலாம் என மருத்துவக் கல்லூரியின் முதல்வர் உஷா சதாசிவன் தெரிவித்தார்.