சென்னை விமான நிலையத் திட்டத்துக்காக செய்யூரில் நிலம் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி காஞ்சிபுரம் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னையை அடுத்து மதுராந்தகம் அருகே செய்யூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, சுமார் 8 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு நிலம் கையகம் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பகுதியில் நன்செய் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. இத்திட்டத்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அந்த இடத்தில் புதிய விமான நிலைய திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் கூறி முறையிட்டனர். அப்போது, குடும்பத்துக்கு ஒரு உயிரைக்கூட எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் விவசாயத்தை எங்களால் கைவிட முடியாது. இது எங்கள் வாழ்வாதாரம். நிலம் எடுப்பதைக் கைவிடுங்கள்' என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், செய்யூரில் விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு எந்தவொரு தகவலும் வரவிவில்லை என்று தெரிவித்தார்.