வில்வராயநல்லூர் முதியோர் இல்லத்தில் நீதிமன்ற வழக்குரைஞர் ஆணையக் குழு ஆய்வு
மதுராந்தகம் அருகே வில்வராயநல்லூர் முதியோர் இல்லத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஆணையக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
மதுராந்தகம் அருகே வில்வராயநல்லூர் முதியோர் இல்லத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஆணையக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
உத்தரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் கருணை இல்லம் மூடப்பட்டதால் அங்கிருந்த முதியோர்கள் மாவட்ட சமூக நலத் துறையினர் மூலம் மீட்கப்பட்டு, மற்ற முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், மதுராந்தகம் அருகே உள்ள வில்வராயநல்லூரில் உள்ள முதியோர் இல்லத்தில் 21 முதியவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நீதிமன்ற வழக்குரைஞர் குழு ஆணையர் சுந்தர மோகன் தலைமையிலான குழுவினர் இந்த இல்லத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள 21 முதியோர்களிடமும் ஆணையர் சுந்தர மோகன் விசாரணை நடத்தினார். இதில், ராஜாமணி (65), ராஜவேலு (60), பகவதி (70) ஆகிய 3 பேர் மட்டுமே மீண்டும் பாலேஸ்வரம் இல்லத்துக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தனர். மற்ற 18 பேரும் மறுத்துவிட்டனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் சங்கீதா, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜூ, உத்தரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி, காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து, அச்சிறுப்பாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகை முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 16 பேரிடம் நீதிமன்ற வழக்குரைஞர் குழுவினர் விசாரணை நடத்தினர்.