கிராமத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
கொளத்தூர் கிராமத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு முன்பு பசுமைத் தாயகம் அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில்
கொளத்தூர் கிராமத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு முன்பு பசுமைத் தாயகம் அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குள் கொளத்தூர் கிராமம் அமைந்துள்ளது. அதையொட்டிய வனப் பகுதியில், திருப்போரூர், சிறுசேரி, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, குன்றத்தூர், பரங்கிமலை மற்றும் காட்டாங்கொளத்தூர் பேரூராட்சிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் கொட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிரப்பு தெரிவித்து பசுமைத் தாயகம் அமைப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி தலைமையில் முன்னாள் எம்எல்ஏவும், பாமக மாநில துணைத் தலைவருமான திருக்கச்சூர் ஆறுமுகம், கணேசமூர்த்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர், மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில் கொளத்தூர் கிராமத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கப்படுவதால் இப்பகுதியில் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்' என்று பசுமைத் தாயகம் அமைப்பினர் தெரிவித்தனர்.
முன்னதாக, கொளத்தூர் கிராமத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்காக அமைக்கப்படும் கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை பொதுமக்கள் லாரிகளையும் ஊழியர்களையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதையடுத்து, கோட்டாட்சியர் முத்துவடிவேல், வட்டாட்சியர் பாக்கியலட்சுமி உள்ளிட்ட வருவாய்த் துறையினர் மற்றும் மறைமலைநகர் காவல் ஆய்வாளர் வடிவேல்முருகன் உள்ளிட்ட போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சமாதானமாகச் செல்வதாகவும் குப்பைக்கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக் கைவிடுவதாகவும் பொதுமக்கள் கூறியதாக கோட்டாட்சியர் தெரிவித்தார். எனினும், பசுமைத் தாயகம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.