போலி பட்டா மாற்றம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராமவாசிகள் மனு
போலி பட்டா மாற்றம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நத்தப்பேட்டை கிராமத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
போலி பட்டா மாற்றம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நத்தப்பேட்டை கிராமத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரத்தை அடுத்த நத்தப்பேட்டை கிராம மக்களுக்குச் சொந்தமாக 4.76 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் (பட்டா எண்.132) கிராமப் பட்டாவை ஜெகன்னாதன், சரஸ்வதி என்ற இருவருக்கு மோசடியாக போலி பட்டா பெயர்மாற்றம் செய்து கொடுத்துள்ளனர். எனவே, இந்தப் பட்டா மாற்றத்துக்கு உதவிய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கிராம மக்களுக்குச் சொந்தமான நிலங்களை சக்தியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் ஆகிய அம்மன் கோயில்களுக்கு நாள்தோறும் பூஜைகளுக்கும், திருவிழாவுக்கும் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், போலி பட்டா மாற்றம் செய்தவர்கள் எங்களது கிராம நிலத்தில் பொக்லைன் வாகனங்களை எடுத்து வந்து மரங்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதுதொடர்பாக கிராமத்தினர் கேட்டதற்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, போலியாக வழங்கிய பட்டாவை ரத்து செய்து கிராம சமூகத்தின் பெயரில் பட்டா வழங்கி கிராம நிலத்தை பாதுகாத்துத் தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.