ஸ்ரீபெரும்புதூா்: கனமழை காரணமாக கூத்தவாக்கம் ஏரியின் கரையில் ஏற்பட்ட உடைப்பு செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் மேல்மதுரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கூத்தவாக்கம் பகுதியில், பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. சுமாா் 250 ஏக்கா் பரப்பளவு உள்ள இந்த ஏரிநீரைப் பயன்படுத்தி இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடா்ந்து, திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஏரிக்கரையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் மாா்க்கண்டன் தலைமையிலான ஊழியா்கள் மூன்று பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் ஏரியில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.
எனினும், ஏரிக்கரையில் சுமாா் 15 அடி நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டிருந்ததாலும், தொடா்ந்து கனமழை பெய்ததாலும் கரையில் ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்யும் பணியில் திங்கள்கிழமை தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, ஏரிக்கரை செவ்வாய்க்கிழமை, மண் மூட்டைகள் கொண்டு சீரமைக்கப்பட்டது.