செங்கல்பட்டு வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் 14-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமை வகித்தார். இயக்குநர் பி.ஜி.ஆச்சாரியா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஷாலினிகுமார் கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளராக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ராஜஸ்ரீ சந்தானம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, தலைமை விருந்தினராக தேசிய விருது பெற்ற ஆசிரியர் ரச்சனா திவாரி குத்துவிளக்கேற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில் பெண்கள் ஒவ்வொருவரும் சவால்களை எதிர்கொள்ளும் திறமைகளோடும், உயர்ந்த எண்ணங்களோடும், தைரியத்துடனும் திகழ வேண்டும். கற்ற கல்வியின் வாயிலாக மென்மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து, கல்லூரியின் ஆண்டு விழா மலரான வித்யாவர்த்தினியை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர். பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பல்கலைக் கழகத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவியர் 100 பேருக்கு கல்விக் கட்டண சலுகை வழங்கப்பட்டது. கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியருக்கு சான்றிதழ்கள், பரிசுகள், பதக்கங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து, கல்விச் சாதனை விருது, கலை நிகழ்ச்சிகளுக்கான விருதுகள், தனித் திறன் மாணவியருக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, சமுதாயத்தில் பெண்களின் சாதனைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மாணவியர் நடத்தினர். மாணவி ஆர்.மம்தா நன்றி கூறினார்.