மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டதால், ராமேசுவரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கடலோரப் பாதுகாப்புப் படையின் இரு படகுகள், சனிக்கிழமை மாமல்லபுரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டு 5 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் புறப்பட்டன.
ராமேசுவரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கடலோரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு நவீன படகுகள் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தன.
இந்த படகுகள் மாமல்லபுரம் கடல் பகுதியைக் கடக்க முயன்றபோது கடல் சீற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு படகுகளும் பலத்த ஒலி எழுப்பிக் கொண்டு, மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலின் தெற்குப் பகுதியில் கரையேறின.
இந்த படகுகளில் பாதுகாப்புப் படை வீரர்கள் 24 பேர் பயணம் செய்தனர். கரையில் நிறுத்தப்பட்ட படகுகளில் இருந்து இறங்கிய பாதுகாப்புப் படை வீரர்கள் அந்நியர்கள் படகில் பிரவேசிக்காமல் இருப்பதற்காக படகுகளைச் சுற்றிலும் தடுப்புகளை அமைத்தனர். இந்த நவீன படகுகள் தரையிலும், தண்ணீரிலும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.
சுமார் 5 மணி நேரம் கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களும், வெளி நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் பார்த்ததுடன், அருகில் நின்று சுயப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர், கடல் சீற்றம் தணிந்த நிலையில் இரு படகுகளும் காலை 8 மணியளவில் மீண்டும் சென்னையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றன.
படகுகள் கரையில் இருந்து கடலை நோக்கிச் சென்றபோது, கடற்கரை மணல் புகை போல் மேலெழும்பியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புப் படை போலீஸார் கூறியது: கடலோரப் பாதுகாப்புப் படை வீரர்கள், கல்பாக்கம் அணு மின் நிலைய பாதுகாப்புக்காக முகாமிட நவீன படகுகளில் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டு, பின்னர் கடல் சீற்றம் குறைந்தவுடன் படகுகள் புறப்பட்டன என அவர்கள்
தெரிவித்தனர்.