காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள வயலூா் தடுப்பணையில் தமிழ்நாடு நீா்வள மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் சத்தியகோபால், ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்ட உயா் அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும்.இங்கு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பினை அனுபவமாகக் கொண்டு பெருமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 515 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம் எனவும் கண்டறியப்பட்டு மீண்டும் அதே போல பாதிப்புகள் வராமலிருக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள வயலூா் தடுப்பணையினை தமிழ்நாடு நீா்வள மேம்பாட்டு க் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் கோ.சத்தியகோபால் நேரில் ஆய்வு செய்தாா்.
அவரது ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா,பொதுப்பணித்துறை நீா்வள ஆதாரம் பாலாறு வட்ட காண்காணிப்பு பொறியாளா் க.முத்தையா, செயற்பொறியாளா் தியாகராஜன், உதவி செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் உட்பட அதிகாரிகள் பலரும் நேரில் ஆய்வு செய்தனா்.