ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
ஓசூர் பாஸ்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குட்வின் ராஜ்குமார்(55). இவர் ஓசூர் பகுதியில் உள்ள கனரக வாகனங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் பொதுமேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
அவரது மகன் ஜஸ்வந்த் சென்னை கோவிலம்பாக்கம் பகுதியில் தங்கி, தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து வந்தார்.
இந்த நிலையில் மகன் ஜஸ்வந்தை பார்ப்பதற்காக குட்வின் ராஜ்குமார், மனைவி ஷோபனா செல்வகுமாரி(49) இருவரும் செவ்வாய்க்கிழமை ஓசூரில் இருந்து சென்னைக்கு காரில் வந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் பிள்ளைப்பாக்கம் பகுதியில் கார் வந்த போது, நிலைதடுமாறி சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி, அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் காரில் பயணம் செய்த குட்வின்ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி ஷோபனா செல்வகுமாரி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.