காஞ்சிபுரத்தில் வழக்குரைஞர் ஒருவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே காரை கிராமம் பஜனைகோயில் தெருவைச் சேர்ந்த வழக்குரைஞர் ச.அழகரசன்(41). இவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர்(40) இருவரையும் ஆட்டோவில் வந்த 3 நபர்கள் சென்னையிலிருந்து பெங்களுரூ செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்துக்கு செல்லும் வழியில் கத்தியால் குத்தியதில் வழக்குரைஞர் அழகரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அழகரசனின் நண்பர் ஜெயசங்கரும் பலத்த காயம் அடைந்து தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தனிப்படையும் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் செட்டியார் பேட்டை மேலத்தெருவைச் சேர்ந்த வெங்கடேசன்(24) செட்டியார் பேட்டை தமிழரசி நகரைச் சேர்ந்த ஸ்ரீதர்(33), கோனேரிக்குப்பம் இலுப்பை தோப்பு தெருவைச் சேர்ந்த வேலு(33) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் கொலை நடந்திருப்பதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.