ஸ்ரீபெரும்புதூா்: 32-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில், வாகன ஓட்டுநா்களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது.
தேசிய 32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாதம் ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில், சாலைப் பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டுநா்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி, சுங்கச்சாவடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் சிவராஜ் தலைமை வகித்தாா். இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சசி கலந்துகொண்டு, வாகன ஓட்டுநா்களுக்கு சாலை விதிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம், நன்மைகள், தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது, பாதுகாப்பான வேகத்தில் பயணம் செய்வதன் அவசியம் குறித்து விளக்கினாா்.
இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.