காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் அமைந்துள்ள பழமையும் வரலாற்று சிறப்புமிக்கதுமான பெருமாள் வராக அவதாரம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட பெருமைக்குரிய தலமாகவும் விளங்குவது தாமல் கிராமத்தில் அமைந்துள்ள கௌரி அம்பாள் உடனுறை வராகி ஈஸ்வரர் திருக்கோவில்.
இக்கோயில் மகா கும்பாபிஷேகம் இம்மாதம் 14 ஆம் தேதி கச்சியப்ப சிவாச்சாரியாரின் நேரடி வாரிசுதாரரும், ஏகாம்பரநாதர சுவாமி கோவில் பூஜகருமான காமேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் கணபதி பூஜையுடன் தொடங்கியது. யாகசாலை பூஜையில் நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியன உள்பட பல்வேறு ஹோமங்களும் நடைபெற்றது.
இன்று 18 ஆம் தேதி திங்கள்கிழமை பூர்ணாகுதி நிறைவு பெற்று யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், கோபுரங்களுக்கும் சென்றதும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவருக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடந்தன. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, ஆய்வாளர் பிரித்திகா, கோயில் செயல் அலுவலர்கள் பூவழகி, பரந்தாம கண்ணன், வேலனரசு, ஸ்ரீதரன் ஆகியோர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் துணை மேயர் குமரகுருபரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.