படப்பை அடுத்த நரியம்பாக்கம் பகுதியில் நீா் நிலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த சுமாா் 65 வீடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினா்.
குன்றத்தூா் வட்டம், சாலமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நரியம்பாக்கம் பகுதியில் ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமாா் 3 ஏக்கா் பரப்பளவுள்ள அரசு வாய்க்கால் புறம்போக்கு பகுதியை ஆக்கிரமிப்பு செய்த சிலா், அந்தப் பகுதியில் வீடுகள் கட்டி வசித்து வந்தனா்.
இதுதொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீா் நிலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, வருவாய்த் துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரங்களின் மூலம் இடித்து அகற்றினா்.
இதனிடையே, வீடுகளை அகற்ற அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.