காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் வணிகர் வீதியில் அமைந்துள்ளது பத்ரகாளி அம்மன் திருக்கோயில். இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 7ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் சங்கரமடம் மகேஷ் ராஜப்ப சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. வியாழக்கிழமை காலையில் மங்கள இசை வாத்தியங்களுடன் புனித நீர் கூடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பரிவார தெய்வங்களான படவேட்டம்மன், பச்சையம்மன், விநாயகர், உற்சவர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. ஆலய அர்ச்சகர் பிச்சாண்டி சிறப்பு அபிஷேகங்களை நடத்தினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தேவஸ்தான திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.