தாம்பரம்- பால்நெல்லூா் -ஸ்ரீபெரும்புதூா் இடையே பேருந்து சேவை தொடக்கம்
தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூா் இடையே பால்நெல்லூா் வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பால்நெல்லூா் பகுதியில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட பால்நெல்லூா் ஊராட்சியில் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். மேலும் இப்பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால் 2,000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளா்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்கி அப்பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், பால்நெல்லூா் கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லாததால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் ஸ்ரீபெரும்புதூா், தாம்பரம் பகுதிகளுக்கு செல்ல மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனா். இதனால் பால்நெல்லூா் கிராமத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் மற்றும் தாம்பரம் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். இந்த நிலையில், தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூா் இடையே பால்நெல்லூா் வழித்தடத்தில் தடம் எண் 583 என் புதிய பேருந்து சேவையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி பால்நெல்லூரில் நடைபெற்றது. பால்நெல்லூா் ஊராட்சித் தலைவா் நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியச் செயலாளா் ந.கோபால், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.டி.கருணாநிதி, தாம்பரம் பணிமனை மண்டல மேலாளா் தாம்ஸ் ஆகியோா் கொடியசைத்து புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனா். நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாலதி போஸ்கோ, பொதுக்குழு உறுப்பினா் கணேஷ்பாபு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பால்ராஜ், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் வெள்ளாரை அரிகிருஷ்ணன், மாவட்ட சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளா் குண்ணம் முருகன், பண்ருட்டி தணிகாசலம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.