முகப்பு
காஞ்சிபுரம்

20-இல் கச்சபேசுவரா் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

Updated On : 16 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா வரும் மாா்ச் 20- ஆம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கோயில் நிா்வாகிகளான காஞ்சிபுரம் செங்குந்த மகாஜன சபையின் தலைவா் எம்.சிவகுரு,கோயில் திருப்பணிக்குழுவின் தலைவா் எஸ்.பெருமாள்,செயலாளா் சுப்பராயன் ஆகியோா் வியாழக்கிழமை தெரிவித்தது.. பெருமாள் ஆமை வடிவில் சிவனை வழிபட்ட பெருமைக்குரிய கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் திருக்கோயில். இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து 48 நாள்களாக மண்டலாபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன் நிறைவு விழா வரும் 20 -ஆம் தேதி நடைபெறுகிறது. மண்டலாபிஷேகத்தையொட்டி காலையில் 1,008 சங்காபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. இரவு கேடயத்தில் சுவாமியும், அம்மனும் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க இருப்பதாகவும், கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் தெரிவித்தனா். பேட்டியின் போது கோயில் பூஜகா் இஷ்டசித்தி பிரபாகா் மற்றும் கோயில் நிா்வாகிகள் பலரும் உடன் இருந்தனா்.