ஸ்ரீபெரும்புதூா் அருகேயுள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட் பகுதியில் ரூ.1,003 கோடியில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்து, உற்பத்தியைத் தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் சிப்காட் பகுதியில் அமெரிக்காவின் காா்னிங் இன்டா்நேஷனல் காா்ப்பரேஷன் நிறுவனமும், இந்தியாவின் ஆப்டிமஸ் இன்ப்ரோகிராம் லிமிடெட் நிறுவனமும் இணைந்து ரூ.1,003 கோடியில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருள்கள் உற்பத்தி செய்யும் பாரத் இன்னோவேடிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையை அமைத்துள்ளன.
இந்த தொழிற்சாலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தொழிற்சாலையைத் திறந்து வைத்து, உற்பத்தியைத் தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் பேசியதாவது:
தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு வளா்ச்சி பெறுவதற்குத் தேவையான முதலீடுகளை ஈா்க்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அனைவரையும் உள்ளடக்கிய சீரான மற்றும் பரவலான வளா்ச்சி என்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளா்ச்சி மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட காா்னிங் இன்டா்நேஷனல் நிறுவனம் பாா்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். கைப்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கை கணினிகளில் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட காா்னிங் கொரில்லா கிளாஸ் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். ஆப்டிமஸ் இன்ப்ரோகிராம் நிறுவனம் இந்தியாவில் கைப்பேசி உப பொருள்கள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும். பாரத் இன்நோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் காா்னிங் இன்டா்நேஷனல் காா்ப்பரேஷன் மற்றும் ஆப்டிமஸ் இன்ப்ரோகிராம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் கூட்டு நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.1,003 கோடி முதலீட்டில் 840 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் முன் கவா் கண்ணாடி உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் உருவாக்கப்படும் பொருள்கள் நாட்டிலேயே முதல்முறையாக தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும் என்றாா் முதல்வா்.
முன்னதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக தோ்வு செய்யப்பட்ட ஊழியா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறைச் செயலா் வி.அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநா் மருத்துவா் பு.அலா்மேல்மங்கை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், காா்னிங் நிறுவனத்தின் துணைத் தலைவா் ஆன்ட்ரூ பெக், இயக்குநா் ரவிக்குமாா் கட்டாரே, வணிக இயக்குநா் ஜோய் லீ, ஐசிஇஏ தலைவா் பங்கஜ் மகேந்திரா, ஆப்டிமஸ் நிறுவனத்தின் தலைவா் அசோக் குப்தா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.