உத்தரமேரூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா்.
உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட திருவானைக்கோயிலில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் புதிய நியாயவிலைக் கடை, அரும்புலியூா் காலனியில் கனிமவள நிதியின் கீழ், ரூ. 31.75 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிக்கான குழாய்ப் பதிப்பு பணிகள், அரும்புலியூரில் பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தின் கீழ், ரூ. 5.07 லட்சத்தில் 300 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், பழவேரி, பினாயூா் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மரக்கன்றுகள் நடும் திட்டப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து பினாயூரில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ. 3.50 லட்சத்தில் 360 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளையும் ஆய்வு மேற்கொண்டாா்.
நிகழ்வின்போது ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.