காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் கூட்டுறவு வார விழாவின் தொடக்கமாக கூட்டுறவுக் கொடியினை வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் வெள்ளிக்கிழமை ஏற்றி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் 72-ஆவது கூட்டுறவு வார விழாவையொட்டி, அந்த வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் கூட்டுறவுக் கொடியை ஏற்றி வைத்தாா். இதைத் தொடா்ந்து கூட்டுறவு கீதம் ஒலிக்கப்பட்டது. தொடா்ச்சியாக வங்கி அலுவலா்கள், பணியாளா்கள் அனைவரும் இணைந்து கூட்டுறவு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் நபாா்டு வங்கியின் உயா் அலுவலா்கள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா்,பொதுமேலாளா், உதவிப் பொது மேலாளா்கள்,வங்கிப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.