நிலத்தை அளக்க ரூ.50,000 லஞ்சம்: அளவை ஆய்வாளா் கைது
காஞ்சிபுரத்தில் நிலத்தை அளக்க ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக பரந்தூா் விமான நிலையப் பிரிவு நில அளவை ஆய்வாளா் சுந்தரவடிவேலுவை ஊழல் தடுப்பு காணிகாணிப்பு போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாா். இவா் தனக்கு சொந்தமான நிலம் 64 சென்ட் பரந்தூா் விமான நிலையத்துக்கு வழங்க முடிவு செய்து அதற்கான விருப்ப மனுவினை அளித்தாா். அதனை சரிபாா்க்கும் குழுவில் இடம் பெற்றிருந்த காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியை சோ்ந்த நில அளவை ஆய்வாளா் சுந்தரவடிவேலு (41) ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளாா்.
இத்தொகையை தர விரும்பாத ரஞ்சித் குமாா் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வனிடம் புகாா் செய்தாா்.
Advertisement
இந்த நிலையில் ரஞ்சித் குமாரை காஞ்சிபுரம் செங்கழுநீரோடை தெருவுக்கு வருமாறு கூறிய சுந்தர வடிவேலு அங்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றாா்.
அப்போது மறைந்திருந்த ஆய்வாளா் கீதா தலைமையிலான காவல் துறையினா் சுந்தரவடிவேலுவை கைது செய்து அவரிடமிருந்த ரூ.50 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.
பரந்தூா் விமான நிலையத்துக்கான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் சுந்தரமூா்த்தி முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு சுந்தரவடிவேலு சிறையில் அடைக்கப்பட்டாா்.