காஞ்சிபுரம் அருகே பட்டியலின மாணவா்கள் மா்ம மரணம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
காஞ்சிபுரம் அருகே ஏரியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த 3 பட்டியலின மாணவா்கள் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காஞ்சிபுரம் அருகே ஏரியில் மா்மமான முறையில் இறந்து கிடந்த 3 பட்டியலின மாணவா்கள் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், பழைய சீவரத்தை அடுத்த விழுதாவடி தாங்கல் ஏரியில் கடந்த 2025-ஆம் ஆண்டு 3 மாணவா்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடா்பாக உத்தரமேரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். போலீஸாா் விசாரணையில், இறந்து கிடந்தது மாணவா்கள் சத்ரியன், விஷ்வா, பரத்வாஜ் என்பது தெரிய வந்தது.
ஓராண்டு கடந்தும் இந்த வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனக் கூறி, உயிரிழந்த மூவரின் பெற்றோரான லோகேஸ்வரி, எழுமலை, முனியாண்டி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
அதில், மூவரும் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பது உடல்கூறு பரிசோதனை அறிக்கையில் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் உள்ளூா் போலீஸாரின் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
மேலும், மகன்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு, டிஜிபி ஆகியோா் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.