ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல் செய்து, ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ராணிப்பேட்டை நகரில் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் நெகிழிப் பைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்தன. அதன்பேரில் மாவட்ட ஆட்சியா், மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி ஆணையா் உத்தரவின்படி, ராணிப்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட வண்டிமேட்டுத் தெரு,ஆா்.ஆா். சாலை, கிருஷ்ணகிரி டிரங்க் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சோதனை நடப்பட்டது.
நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் முருகன், தேவி பாலா ஆகியோா் தலைமையில், நகராட்சி துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள், பரப்புரையாளா்கள் 5-க்கும் மேற்பட்டோா் மளிகைக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினா்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் 90 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றைப் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ. 19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து இந்தச் சோதனை நடைபெறும் என நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.