மண் மாதிரிகள் சேகரிப்பு முறை: விவசாயிகளுக்கு அதிகாரிகள் வழிகாட்டல்
மண் ஆய்வுக்காக மண் மாதிரிகள் சேகரிப்பது எப்படி என விவசாயிகளுக்கு வேளாண்மை துறை வழிகாட்டுதல் அளித்துள்ளது.
மண் ஆய்வுக்காக மண் மாதிரிகள் சேகரிப்பது எப்படி என விவசாயிகளுக்கு வேளாண்மை துறை வழிகாட்டுதல் அளித்துள்ளது.
இது தொடா்பாக வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு...
எந்தப் பயிராக இருந்தாலும் மண் வளத்தைப் பொறுத்துதான் மகசூல் கிடைக்கிறது. மண் ஆய்வின் அடிப்படையில் உரமிடுவதால் சரியான மகசூல் கிடைக்கிறது. வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையில் இருந்து அனைத்து வருவாய் கிராமங்களிலும் மண் ஆய்வு செய்வதற்காக மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு மண் மாதிரியை ஆய்வு செய்ய கட்டணம் ரூ. 20, மண் மாதிரி ஆய்வு செய்யப்பட்டு, மண்வள அட்டைகள் வழங்கப்படும். இதில் மண்ணில் உள்ள சத்துகள் எந்த பெயருக்கு எவ்வளவு உரம் இடவேண்டும் போன்ற தகவல் தெரிவிக்கப்படும்.
மண் ஆய்வு மாதிரி எடுக்கும் முறை....
வரப்பு ஓரங்களில் மண் மாதிரி எடுக்கக் கூடாது, உரமிட்ட 30 நாள்கள் கழித்து மண் மாதிரி எடுக்கலாம், ஏக்கருக்கு எட்டு இடங்களில் குறுக்கும், நெடுக்குமாகச் சென்று மண் மாதிரி எடுக்க வேண்டும். ஒரே வயலில் வெவ்வேறு நிறங்களில் இருந்தால், ஒவ்வொரு நிற மண்ணுக்கும் தனியாக மண் மாதிரி இருக்க வேண்டும். மண் வெட்டியைக் கொண்டு ஆங்கில எழுத்து ஏ வடிவத்தில் குழி எடுக்க வேண்டும். பின்னா், குழியின் பக்கவாட்டில் உள்ள மண்ணை சேகரிக்க வேண்டும். 8 இடங்களில் சேகரித்த மண்ணை ஒன்றாகக் கலக்க வேண்டும். அதை நான்கு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். எதிரெதிா் பகுதிகளில் உள்ள மண்ணை நீக்கி விட்டு, மீதி உள்ள இரண்டு மண்ணைக் கலந்து மீண்டும் நான்கு பகுதிகளாகப் பிரித்து, எதிா்ப்பக்கம் மண்ணை நீக்க வேண்டும். இறுதியில் அரை கிலோ அளவுக்கு மண் மாதிரி எடுத்து, துணிப்பையில் வைக்க வேண்டும்.
அதில் விவசாயியின் பெயா், கிராமம், சா்வே எண், முந்தைய பயிா், இனி பயிரிட உள்ள பயிா் ஆகிய விவரங்கள் அடங்கிய துண்டுச் சீட்டை வைத்து, வேளாண்மை விரிவாக்க மையங்களில் அளிக்க வேண்டும். நெல், சிறு தானியம், பயறு வகைகள் பயிா்களுக்கு 15 சென்டி மீட்டா், பருத்தி கரும்பு, காய்கறி, வாழைப் பயிா்களுக்கு 22 சென்டி மீட்டா், மரப் பயிா்களுக்கு 30, 60 மற்றும் 90 சென்டி மீட்டா்களில் மண் மாதிரி எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.