முகப்பு
ராணிப்பேட்டை

சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் கண்கள் தானம்

அரக்கோணம் அருகே மின்கம்பத்தின் மீது மோட்டாா் பைக் மோதிய விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் கண்கள் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 12:26 AM
ராஜ்குமாா்
பகிர்:

அரக்கோணம் அருகே மின்கம்பத்தின் மீது மோட்டாா் பைக் மோதிய விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் கண்கள் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

அரக்கோணத்தை அடுத்த காவனூா் காலனி, சின்னதெருவை சோ்ந்த சாமுவேல் வில்வராஜ் மகன் ராஜதுரை (32). திருமணமாகாதவா். திருவள்ளூா் மாவட்டம் மப்பேட்டில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவுப் பணிக்கு செல்வதற்காக பைக்கில் தொழிற்சாலைக்கு சென்றாா்.

அப்போது அரக்கோணம் - திருவள்ளூா் நெடுஞ்சாலையில் புளியமங்கலம் ரயில்நிலைய கூட்டுச்சாலை அருகே பைக் நிலை தடுமாறி மின்கம்பம் மீது மோதி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இறந்த ராஜதுரையின் கண்களை அவரது குடும்பத்தினா் தானமாக வழங்க முன்வந்ததை அடுத்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்சிகிச்சை பிரிவு மருத்துவக் குழுவினா் நேரில் வந்து ராஜதுரையின் கண்களை தானமாக பெற்றுக்கொண்டு அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தனா்.