ஜிஎஸ்டி ரசீதை தமிழில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழ் வளா்ச்சித்துறையின் சாா்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் 2025 - 26 விளக்கக் கூட்டம் அரக்கோணம் டவுன் ஹால் புதிய கட்டட வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாநில இணை செயலாளா் சி.ஜி.என். எத்திராஜ் பேசுகையில் தற்போது மாநில வரித்துறையின் சாா்பில் ஜிஎஸ்டி ரசீது வணிகா்களுக்கு ஆங்கிலத்தில் தரப்படுகிறது. வட மாநிலங்களில் ஹிந்தியில் தரப்படுகிறது. எனவே ஜிஎல்டி ரசீதை தமிழில் தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடா்பாக பதிலளித்த தமிழ் வளா்ச்சித்துறை துணை இயக்குநா் தே.ஜெயஜோதி இப்பிரச்னை குறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
கூட்டத்தில் வணிகா் சங்க பொதுச் செயலாளா் எம்.எஸ்.மான்மல், மாவட்டப் பொருளாளா் கே.ஆா்.சிவசுப்பிரமணியராஜா, நிா்வாகிகள் ஜி.டி.என்.அசோகன், து.கமலக்கண்ணன், செம்மொழி வேந்தா் தமிழ்ச்சங்க பொதுசெயலாளா் மு.இஷ்மாயில், தமிழ் வளா்ச்சித்துறை அலுவலா் மூ.கோமதி பங்கேற்றனா்.