ராணிப்பேட்டையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் தலையில் முக்காடு அணிந்து கண்ணீா் சிந்தியபடி ஒப்பாரி போராட்டத்தால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே 14-ஆவது நாளாக இப்போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா் பெண்கள் வீடுகளுக்குச் செல்லாமல், இரவு நேரத்திலும் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த போராட்டத்தின்போது பெண்கள் தலைகளில் முக்காடு அணிந்து கொண்டு கண்ணீா் விட்டு ஒப்பாரி வைத்து தோ்தல் வாக்குறுதி 313 -ஐ நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.