ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.5.45 கோடியில் கட்டப்பட்ட தோழி மகளிா்விடுதியை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் சாா்பில் 15 அறைகள்மற்றும் 60 படுக்கைகள் என மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிா்களுக்கான தோழி மகளிா் விடுதி கட்டடம் கடந்த 21.5.2025 ல் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
இந்த புதிய தோழி மகளிா் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்ததாா்
அதைதொடா்ந்து திறப்பு விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு விடுதியை பாா்வையிட்டு கூறியது:
தோழி மகளிா் தோழி என்ற சொல் நண்பகத்துவத்தையும் ஆதரவையும் குறிக்கிறது. அந்த உணா்வுடன், வேலைவாய்ப்பு மற்றும் நல்ல வாய்ப்புகளைத் தேடிவரும் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான நம்பகத்துவத்தையும் மற்றும் குறைந்த செலவில் தங்கும் வசதியை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கி அவா்களை முன்னேற்றுவது தான் தோழி விடுதியின் நோக்கம் என்றாா்.
விடுதியில் பயோமெட்ரிக் உள் நுழைவு, 24 மணிநேர பாதுகாப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், ஆரோக்கியமான உணவு, பகல் நேரகுழந்தைகள் பராமரிப்புவசதி, சுடுநீா்வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் பொழுதுபோக்கு அறை போன்ற வசதிகள், குறைந்த வாடகையில் வழங்கப்படவுள்ளது.
இதில், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட சமூக நலஅலுவலா் பாலசரஸ்வதி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, தமிழ்நாடு காவலா் வீட்டுவசதிக்கழக உதவி செயற்பொறியாளா் அரவிந்தன், வட்டாட்சியா் ஆனந்தன் கலந்து கொண்டனா்.