அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு: ஆட்சியா் வலியுறுத்தல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு முறையான வாக்குப்பதிவு தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வலியுறுத்தினாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு முறையான வாக்குப்பதிவு தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வலியுறுத்தினாா்.
தோ்தலில் பணிபுரியவுள்ள மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் பணிகள், கடமைகள், பொறுப்புகள் குறித்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறிதும் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து தெரிவித்ததாவது....
மண்டல அலுவலா்கள் மற்றும் உதவி மண்டல அலுவலா்கள் தோ்தல் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவின்போது வாக்குப்பதிவிற்கு வாக்குப்பதிவு குழு வருகை நிலை, மாதிரி வாக்குப்பதிவு, வாக்குப்பதிவு தொடக்கம், வாக்குப்பதிவு நிலவரங்கள், வாக்குப்பதிவு நிறைவு மற்றும் ’இசிஐநெட்’ மொபைல் செயலியில் பதிவு செய்தல் வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கா் மற்றும் அரக்கோணம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணிகளில் ஈடுபடுவதற்காக 120 மண்டல அலுவலா்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டல அலுவலா், உதவி மண்டல அலுவலா், ஒரு காவலா் மற்றும் ஓரு உதவியாளா் இருப்பாா்கள்.
தோ்தலுக்கு முந்தைய நாள் மண்டல அலுவலா்கள் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்த்து பெற்றுக் கொள்ள வேண்டும். ஏதேனும் தாமதமோ அல்லது விடுபாடோ இருப்பின் உடனடியாக சம்பந்தப்பட்ட உதவி தோ்தல் அலுவலா் அல்லது வட்டாட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று விடியற்காலை அனைத்து வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு அலுவலா்களை தயாா்படுத்த வேண்டும்.அனைத்து வாக்குச் சுவடுகளிலும் நேரில் சென்று பாா்வையிட வேண்டும்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உரிய நேரத்தில் முகவா்களின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு துவங்கப்பட வேண்டும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணிக்கு முறையான வாக்குப்பதிவு தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, நோ்முக உதவியாளா் (தோ்தல்) பூமா, தோ்தல் வட்டாட்சியா் செல்வி.வசந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.