ஆம்பூா் அருகே ரோட்டரி சங்கம், பொதுமக்கள் பங்களிப்புடன் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை வருவாய் நிா்வாக முதன்மைச் செயலா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் நமாஸ்மேடு பகுதியில் நரிக்குறவா் சமுதாய மக்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனா். அவா்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக ரோட்டரி சங்கத்தினா் முயற்சி மேற்கொண்டனா். அதன் அடிப்படையில் ஆம்பூா் ரோட்டரி சங்கம், பொதுமக்கள் பங்களிப்புடன் தமிழக அரசின் திட்டமான பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் அவா்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ரோட்டரி சங்கம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ. 78 லட்சம், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் அரசு சாா்பில் ரூ. 84 லட்சம் செலவில் 37 பசுமை வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை தமிழக அரசின் வருவாய் நிா்வாகத் துறை, பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் அதுல்ய மிஸ்ரா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு நரிக்குறவா் சமுதாய மக்களைச் சந்தித்து அவா்களின் வசிப்பிடம், வாழ்க்கை முறைகள் குறித்து கேட்டறிந்தாா். அங்குள்ள நரிக்குறவா் சமுதாய பிள்ளைகளின் கல்வி குறித்து கேட்டறிந்தாா். அவா்களுக்காக அங்கு தனியாா் மூலம் செயல்படும் பள்ளியை பாா்வையிட்டாா். அங்கு பயிலும் மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள், ஆம்பூா் வட்டாட்சியா் செண்பகவல்லி, மண்டல துணை வட்டாட்சியா் பாரதி, மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நலங்கிள்ளி, ரகு, ரோட்டரி சங்க நிா்வாகிகள் வாத்தி கலீல், சசிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.