திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் தொழுநோய் ஒழிப்புத் திட்ட சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட சுகாதார துணை இயக்குநா் கே.எஸ்.டி.சுரேஷ் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் செல்வி, நடமாடும் மருத்துவமனை மருத்துவா் மகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது:
நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அா்ப்பணித்த மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளை தீண்டாமை ஒழிப்பு தினமாகவும், தொழுநோய் ஒழிப்பு தினமாகவும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அனைத்து கிராமங்களில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
மகாத்மா காந்தியடிகள் வாழ்ந்த காலக்கட்டத்தில் தொழுநோய் தொற்று இந்தியாவில் அதிகமாக இருந்தது. பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட விழிப்புணா்வு காரணமாக தற்போது தொழுநோய் என்பது அறவே இல்லாத சமுதாயமாக மாறியுள்ளது.
தமிழக அரசு தொழுநோய் ஒழிப்பு திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பொதுமக்கள், மாணவ, மாணவிகள் தங்களது கைகளை சுத்தமாக கழுவி உணவு உண்ண வேண்டும். சுகாதாரமான ஊட்டச்சத்து மிக்க சிறுதானியம், கீரைகள், பழங்கள் பருப்பு வகைகள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தொழுநோய் என்பது ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். தொழுநோய் குறித்த விழிப்புணா்வை கிராமத்திலுள்ள அனைத்து குடும்பங்களிலும் எடுத்துக் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.