திருப்பத்தூா்: இந்து சமய அறநிலையத் துறையின் வேலூா் மண்டலம் சாா்பில் நடைபெற்ற மாா்கழி இசைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் விநியோகிக்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வேலூா் மண்டல அளவில் 2021-ஆம் ஆண்டுக்கான மாா்கழி இசைத் திருவிழா (பாவை விழா) போட்டி நடத்தப்பட்டது. திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடும் போட்டி, கட்டுரைப் போட்டி நடைபெற்றது.
இணையவழியிலான போட்டி திங்கள்கிழமை வேலூரில் உள்ள நாராயண ரெட்டியாா் சத்திரத்தில் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் நடைபெற்ற இப்போட்டியில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை, 6 முதல் 8-ஆம் வகுப்பு, 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை என 3 பிரிவுகளில் 147 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த 36 மாணவ, மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. திருப்பத்தூா் தருமராஜா கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அறநிலையத் துறை வேலூா் மண்டல இணை ஆணையா் செ.மாரிமுத்து மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினாா்.
செயல் அலுவலா்கள் மா.மாதவன், அ.பிரியா, உமேஷ் குமாா் பங்கேற்றனா். அறநிலையத் துறை திருப்பத்தூா் ஆய்வாளா் ந.திலக் நன்றி கூறினாா்.