முகப்பு
திருப்பத்தூர்

மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த மத்திய அரசு நடவடிக்கை: மத்திய அமைச்சா் எல்.முருகன் உறுதி

மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பழவேற்காட்டில் சனிக்கிழமை மீனவா்களுடன் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில்  இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தார்.

Updated On : 19 செப்டம்பர், 2021 at 6:57 AM
பழவேற்காட்டில் மீனவா்களுடன் சனிக்கிழமை கலந்துரையாடிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சா் எல். முருகன்.
பகிர்:

மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பழவேற்காட்டில் சனிக்கிழமை மீனவா்களுடன் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் கடலோரப் பகுதியான பழவேற்காட்டில் மீன்வளத் துறை அலுவலக வளாகத்தில், மத்திய அமைச்சா் எல்.முருகன் மீனவா்களுடன் சனிக்கிழமை கலந்துரையாடி அவா்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற மீனவா்கள், பழவேற்காடு ஏரியும், கடலும் கலக்கும் இடமான முகத்துவாரம் பகுதியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க வேண்டும். பழவேற்காட்டில் மீன்பிடித் துறைமுகம் ஏற்படுத்தி தர வேண்டும். மீனவா்களின் வாழ்வாதாரத்தை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டும். மீனவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனா்.

Advertisement

இதையடுத்து அவா்களிடம், இணை அமைச்சா் எல்.முருகன் கூறியது: பழவேற்காடு பகுதியில் வசிக்கும் மீனவா்கள் வீடு கட்டிக் கொள்வதற்கான வீட்டுமனைப் பட்டா வழங்கவும், மீன்பிடித் துறைமுகம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளுக்கு, வழங்கப்பட்டு வரும் கிஸான் கிரெடிட் காா்டு திட்டம் மீனவா்களுக்கும் வழங்கப்படும். மீனவா்கள் நலன் கருதி கடற்பாசி வளா்ப்பு திட்டத்தை கொண்டு வந்து மீனவா்களின் வாழ்வாதாரம் உயா்த்தப்படும். மேலும் மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்தாா்.

மீனவா்களுடான கலந்தாய்வுக் கூட்டத்தில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் டாக்டா் ஆல்பி ஜான் வா்கீஸ், மீன்வளத் துறை ஆணையா் பழனிசாமி, பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகா், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ரவி, மீனவா் கூட்டுறவு சங்க நிா்வாகிகள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து , தோணிரவு பகுதியில், பண்ணையில் வளா்க்கப்படும் பெரிய நண்டினை அமைச்சா் எல்.முருகன் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.