திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே சாலையை அகலப்படுத்த வலியுறுத்தி மலை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த ஆர்.எம்.எஸ் புதூர் பகுதியிலிருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய, வனத்துறைக்கு சொந்தமான 9 அடி அகல தார் சாலை, பராமரிப்புப் பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஜமுனாமரத்தூர், போளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வர இந்த சாலையை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
9 அடி அகலமே உள்ள இந்த சாலையின் உயரம் 2 அடிக்கும் மேல் உள்ளதால், ஒரு வாகனம் செல்லும்போது மற்றொரு வாகனம் அதையே பின் தொடர்ந்து செல்ல வேண்டும்.
இதையும் படிக்க: கடலூர் திமுக எம்.எல்.ஏ. மீதான நடவடிக்கை ரத்து
மேலும், எதிரில் வரும் வாகனத்திற்கு வழி விட முயலும்போது விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாவதாக கூறி ஏற்கனவே 2 முறை நாயக்கனூர் மற்றும் பீமகுளம் சுற்றுவட்டார பகுதிகளில், வசிக்கின்ற 15 மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சாலையை அகலப்படுத்த அனுமதி வேண்டி வனத்துறையிடம், நெடுஞ்சாலைத்துறை விண்ணப்பித்திருந்த நிலையில், 47 லட்சம் ரூபாய் செலுத்திவிட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நீண்ட நாட்கள் கடந்த பின்பும் சாலையை அகலப்படுத்தும் பணிகள் துவங்கப்படாத காரணத்தினால், ஆத்திரமடைந்த மலை கிராம மக்கள் தற்போது மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன், வட்டாட்சியர் சம்பத் உள்ளிட்டோர் மலைகிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சாலையை விரிவுபடுத்தும் பணி தொடங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று மலை கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.