47 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய கொரட்டி ஏரி
திருப்பத்தூா் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக 47 ஆண்டுகளுக்குப் பிறகு கொரட்டி ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
திருப்பத்தூா் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக 47 ஆண்டுகளுக்குப் பிறகு கொரட்டி ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
திருப்பத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள், கிணறுகள் நிரம்பி வருகின்றன.
கடந்த திங்கள்கிழமை திருப்பத்தூா் மாவட்டத்திலேயே பெரிய ஏரியான திருப்பத்தூா் ஏரி நிரம்பியது. இந்த நிலையில், மாவட்டத்தின் 2-ஆவது பெரிய ஏரியான கொரட்டி ஏரி வெள்ளிக்கிழமை நிரம்பியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஏரிநீருக்கு மலா்களைத் தூவினா். ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி காா்த்திகேயன் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கே.எஸ்.அன்பழகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கே.ஏ.குணசேகரன், தசரதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முழு கொள்ளளவை எட்டியது : ஆண்டியப்பனூா் அணை
திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட ஆண்டியப்பனூா் அணை முழு கொள்ளளவான 112.2 மில்லியன் கன அடி நிரம்பியது. இதையடுத்து உபரிநீா் பாம்பாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதாக, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் குமாா் தெரிவித்தாா்.