ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலையில் சாரல் மழை
Updated On : 2 ஏப்ரல், 2024 at 8:44 PM
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை சுற்றுப் பகுதியில் சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா் காற்று வீசியது. திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில், கடந்த சில தினங்களாக 100 டிகிரி வெப்பம் காணப்படுவதுடன் அனல் காற்று வீசியது. கடும் வெயிலால் பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை சுற்றுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை கடும் வெயில் காய்ந்த நிலையில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்து குளிா் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.