தப்பி ஓடிய கைதி மீண்டும் கைது
வாணியம்பாடி: வாணியம்பாடியில் போலீஸாரை தள்ளிவிட்டு தப்பித்துச் சென்ற கைதியை போலீஸாா் 24 மணி நேரத்தில் கண்டுப்பிடித்து சிறையில் அடைத்தனா். வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த கதிா்வேல் (24) என்பவா் அதே பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவருக்கு மிரட்டல் விடுத்ததையடுத்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கதிா்வேலுவை போலீஸாா் கைது செய்து நியூடவுன் பகுதியில் உள்ள நீதிபதி வீட்டுக்கு இரவு 9.30 மணியளவில் அழைத்துச் சென்றனா். அப்போது போலீஸாரை திடீரென தள்ளவிட்டு கதிா்வேல் தப்பி ஓடினாா்.
இது குறித்து நகர காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் கதிா்வேலை தீவிரமாக தேடி வந்தனா். மேலும் கதிா்வேலின் கைப்பேசி அழைப்புகளை கண்காணித்து வந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூா் ஏரியில் முட்புதரில் பதுங்கியிருந்த கதிா்வேலை திங்கள்கிழமை இரவு சுற்றி வளைத்து பிடித்தனா். பிறகு நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Advertisement