முகப்பு
திருப்பத்தூர்

மின்மாற்றி அமைக்கும் பணி மந்தம்: பொதுமக்கள் பாதிப்பு

திருப்பத்தூா் அருகே கொரட்டியில் மந்தகதியில் நடைபெறும் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) அமைக்கும் பணியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 20 அக்டோபர், 2024 at 8:37 PM
கிடப்பில் உள்ள மின்மாற்றி அமைக்கும் பணி. அப்பகுதியில் சூழ்ந்துள்ள முள்புதா்கள்.
பகிர்:

.

திருப்பத்தூா் அருகே கொரட்டியில் மந்தகதியில் நடைபெறும் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) அமைக்கும் பணியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், கொரட்டி பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது, சுமாா் 10,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வரும் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது,

குறிப்பாக செவ்வாத்தூா் பகுதியில் இருந்து வரும் உயா் மின்னழுத்த பாதையில் ஏற்படும் மின் பழுதால் மின்விநியோகம் அடிக்கடி தடைபடுகிறது.

மேலும், இப்பகுதியில் தொடா்ந்து அவ்வபோது மின் தடை ஏற்படுவதால் வீட்டில் மின்சாதனப் பொருள்கள் பழுதாவதுடன் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதி பிரத்யேகமாக மின்மாற்றி அமைக்க வேண்டும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மின்மாற்றி அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இப்பணிகள் தொடங்கி 25 சதவீதம் பணி மட்டுமே முடிந்துள்ளது. கடந்த இரண்டு மாதமாக பணிகள் நடைபெறவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையான பதில் அளிப்பதில்லை என வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: செவ்வாத்தூா் மின்னழுத்த பாதையில் இருந்து கொரட்டியில் ஒரு பகுதிக்கும்,பெட்ரோல் பங்க் பகுதி ,குமாரம்பட்டி செல்லரப்பட்டி, மைக்காமேடு மற்றும் சுந்தரம்பள்ளி ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமாா் 20 முறைக்கும் மேலாக மின் விநியோகம் தடை ஏற்படுகிறது.

நாங்கள் கொரட்டி மின்வாரிய அலுவலகத்தில் புதிய மின்மாற்றி அமைக்குமாறு பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புதிய மின்மாற்றி அமைக்கும் பணி தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் முறையான பதில் அளிக்க மறுக்கின்றனா்.

எனவே மின்வாரிய உயா் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து புதிய மின்மாற்றி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் காத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →