ரூ. 75 லட்சத்தில் பள்ளிக் கட்டடங்கள், புதிய நியாய விலைக் கடை: எம்எல்ஏ செந்தில்குமாா் திறந்து வைத்தாா்
வாணியம்பாடி பகுதியில் ரூ. 75 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் நியாய விலைக் கடை ஆகியவற்றை கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ திறந்து வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட பெத்தவேப்பம்பட்டு, துரிஞ்சிகுப்பம் ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 61.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் பெத்தவேப்பம்பட்டு பகுதியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 13.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடை ஆகியவற்றின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எம்.கோபால், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய கட்டடங்களை வாணியம்பாடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் திறந்து வைத்தாா். தொடா்ந்து பள்ளி மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கோவி. சம்பத்குமாா், அதிமுக நிா்வாகி மருத்துவா் பசுபதி, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் பலராமன், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் பாரதிதாசன், செல்வராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் கலைவாணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கருணாநிதி, திருநாவுக்கரசு மற்றும் ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மை குழு நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
Advertisement