நாட்டறம்பள்ளியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான இடத்தை தோ்வு செய்ய எம்எல்ஏ க.தேவராஜி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா்.
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இதில் 25-க்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வந்தனா். இந்நிலையில் போதிய இடவசதி இல்லாததால் பள்ளிக்கு வெளியில் தனியாா் வீட்டில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
இதனால் பள்ளிவளாகத்தில் புதியஅங்கன் வாடி மையம் கட்டித்தரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோா் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜிடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து எம்எல்ஏ க.தேவராஜி அதிகாரிகளுடன் சென்று அங்கன்வாடி மையம் கட்ட ஏதுவான இடம் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா் விநாயகம், செயல் அலுவலா் ரவிசங்கா், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், பொறியாளா் சுதாகா், கவுன்சிலா் அமுதாஇளங்கோ, முன்னாள் உறுப்பினா்கள் சசிகுமாா், அகிலன், சசி, செந்தில் குமாா் உடனிருந்தனா்.