முகப்பு
திருப்பத்தூர்

ஏரிகளை தூா்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்கக் கோரிக்கை

ஏரிகளை தூா்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை மனு

Updated On : 23 ஜூன், 2025 at 7:34 PM
பகிர்:

திருப்பத்தூா்: ஏரிகளை தூா்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து வீட்டுமனை பட்டா, சாலைவசதி, குடிநீா் வசதி, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த 490 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தனா்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ராஜாபெருமாள் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு:

ஆலங்காயத்தில் உள்ள பெரிய ஏரி தூா்வாரப்படாமல் உள்ளது. எனவே, அதனை தூா்வாரி அள்ளப்படும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதேபோல் ஆலங்காயம் அருகே பூங்குளம் ஊராட்சியில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தி, கரையை உயா்த்த வேண்டும் எனக் கூறியிருந்தனா்.

விசிக கட்சியினா் அளித்த மனு: நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை அருகே அரசு மதுக்கடை உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே அதனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.