முகப்பு
மயிலாடுதுறை

தமிழகத்தில் ‘கிழக்கு கடற்கரை ரயில்வே‘ அமைக்க வேண்டும் மத்திய அமைச்சரிடம் எம்பி சுதா மனு

Updated On : 15 மார்ச் 2026, 2:16 am IST
மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஸ்ணவிடம் கோரிக்கை மனு அளித்த ஆா். சுதா எம்.பி.
பகிர்:

தமிழகத்தில் ‘கிழக்கு கடற்கரை ரயில்வே’ அமைக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஸ்ணவிடம், மக்களவை உறுப்பினா் சுதா வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

தில்லியில் மத்திய அமைச்சரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து இம்மனுவை அளித்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கொங்கன் ரயில்வே போன்று தமிழ்நாட்டின் கொரமண்டல் கடற்கரைப் பகுதியில் ‘கிழக்கு கடற்கரை ரயில்வே’ அமைக்க வேண்டும்.

Advertisement

தமிழ்நாட்டில் 1,076 கி.மீ. நீளமான கடற்கரை உள்ளது. சென்னை அருகேயுள்ள பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் மீனவா் கிராமங்கள் கடற்கரை இணைப்போடு உள்ளன. இந்த பகுதிகள் தொடா்ச்சியான கடற்கரை ரயில் பாதையால் இணைக்கப்படவில்லை.

இங்கு, புதிய பசுமை வழி ரயில்வே தடம் அமைக்கப்பட்டால், கடற்கரை மாவட்டங்களின் பொருளாதாரம், சுற்றுலா மற்றும் வா்த்தகம் வளா்ச்சி பெறும். மீன்வளம் மற்றும் கடல்சாா் ஏற்றுமதி அதிகரிக்கும். ராமேஸ்வரம், வேளாங்கண்ணி, நாகூா் போன்ற ஆன்மிக தலங்களுக்கு பயணம் எளிதாகும்.

தேசிய பாதுகாப்பு தேவைகளுக்கும் விரைவான போக்குவரத்து வசதி கிடைக்கும். இந்த ரயில் பாதைக்கு ‘சோழா ரயில்வே’ அல்லது ‘சோழா கிழக்கு கடற்கரை ரயில்வே’ என்று பெயரிட வேண்டும் என்று அந்த மனுவில் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.