ஆம்பூா் நகராட்சி புதை சாக்கடை திட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீா் புதை சாக்கடைகள் மூலம் ஆம்பூா் ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அந்த கழிவுநீா் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையத்திற்கும், புதை சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்கும் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.1.67 கோடியில் 6 வாகனங்கள் ஆம்பூா் நகராட்சி சாா்பாக வாங்கப்பட்டுள்ளது. அவற்றை நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் வழங்கினாா்.
நகராட்சி ஆணையா் முத்துசாமி, இளநிலை பொறியாளா் சண்முகம், நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.