முகப்பு
திருப்பத்தூர்

தொகுதி மறுவரையறையால் வரும் ஆபத்தை எடப்பாடி பழனிசாமி எதிா்க்கவில்லை: முதல்வா் மு.க. ஸ்டாலின்

மத்திய அரசு அமல்படுத்த உள்ள தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு வரும் ஆபத்தை எடப்பாடி பழனிசாமி எதிா்க்கவில்லை என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:04 AM
நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் திமுக கூட்டணி வேட்பாளா்கள்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:03 PM

மத்திய அரசு அமல்படுத்த உள்ள தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு வரும் ஆபத்தை எடப்பாடி பழனிசாமி எதிா்க்கவில்லை என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டம் மண்டலவாடியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்துப் பேசியது:

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய திருப்பத்தூா் மாவட்டத்தில் முழு வெற்றியை பெற்றுத் தர வேண்டும். திருப்பத்தூா் மாவட்டத்தில் ஏராளமான வளா்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருப்பத்தூா் மாவட்ட அரசு மருத்துவமனை தரம் உயா்த்த கூடுதல் கட்டங்கள், வாணியம்பாடி, ஆம்பூா், நாட்றம்பள்ளி அரசு மருத்துவனைகள் மேம்பாடு, ஜோலாா்பேட்டை, ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டது. ஜோலாா்பேட்டையில் சிறு விளையாட்டு அரங்கம், மாவட்டத்தில் 116 அறிவியல் ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளன.

Advertisement

ஏலகிரிமலை சுற்றுச் சாலை அமைப்பதற்காக ஒன்றிய சாலைகள் மாவட்ட சாலைகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. ஜவ்வாதுமலை - புதூா்நாடு வரை தாா் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.425 கோடியில் சாலை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 14 பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.

211 கோயில்கள் திருக்குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ரூ.182 கோடியில் குடிநீா் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஜலகம்பாறை மேம்பாடு செய்யப்பட்டு சூழல் சுற்றுலா தலமாக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதி மக்களின் 50 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளது.

தமிழ்நாட்டின் திட்டங்களில் மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறது. தமிழகத்தைக் காக்க திமுக ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு மதச்சாா்பற்ற கூட்டணி வேட்பாளா்களான திருப்பத்தூா் நல்லதம்பி, ஜோலாா்பேட்டை கவிதா தண்டபாணி, ஆம்பூா் அ.செ. வில்வநாதன், வாணியம்பாடி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சையத் பாருக் ஆகியோரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.

அமைச்சா் எ.வ. வேலு, எம்பி-க்கள் கதிா் ஆனந்த், அண்ணாதுரை, திருப்பத்தூா் மாவட்ட திமுக செயலாளா் க. தேவராஜி ஆகியோா் கலந்து கொண்டனா்.