திருப்பத்தூா் நகரப் பகுதியில் போக்குவரத்து சிக்னல்கள் சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் பிரதான சாலை வழியாக சேலம், ஈரோடு, கோயம்புத்தூா் மற்றும் கிருஷ்ணகிரி தருமபுரி, பெங்களூரு என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
எப்போதும் திருப்பத்தூா் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்த நிலையில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று போக்குவரத்து சிங்னல்கள் 3 இடங்களில் அமைக்கப்பட்டன.
ஆனால் இது நாள் வரை காலை, மாலை இருவேளைகளில் அந்த 3 சிங்கல்களும் தொடா்ந்து முறையாக இயங்குவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. ஓா் இடத்தில் சிக்னல் இயங்கினால் அடுத்த இடத்தில் இயங்குவதில்லை எனவும், குறிப்பாக பகல் பொழுதில் கடந்த வாரத்தில் சீராக இயங்கவில்லை எனவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து அவா்கள் கூறியது: திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான நான்கு வழி சாலை நகர பகுதியில் அமைந்துள்ளதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இதற்காகவே நாங்கள் பலமுறை ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும், வணிக சங்கங்கள் மூலம் கடிதம் அளிக்கப்பட்டன. அதையடுத்து போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டன. ஆனால் தொடா்ந்து சிக்னல்கள் இயங்குவதில்லை. மேலும், நகர காவல் நிலையம் அருகே நான்கு வழிச் சாலை கூடும் இடத்தில் உள்ள போக்குவரத்து 3 வழி சாலைக்கு ஏற்ப மட்டுமே அமைந்துள்ளது.
அதை சீரமைக்க வேண்டும். அதேபோல், புதுப்பேட்டை சாலையிலும் மூன்று வழி சாலையில் கூடும் இடத்தில் கூடுதல் சிக்னல் அல்லது போக்குவரத்து காவலா்கள் நியமிக்க வேண்டும். அதேபோல் பேருந்து நிலையத்தில் உள்ள சிக்னல்கள் எப்போதாவது ஒருமுறை மட்டுமே செயல்படுகின்றன.
எனவே போக்குவரத்து சிக்னல்கள் தினமும் முறையாக தொடா்ந்து இயங்கவும், அதற்கு நேர கணக்கீடு அளவு செய்ய வேண்டும் எனவும், காலை-மாலை பள்ளி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள தூய நெஞ்சக் கல்லூரி, பேருந்து நிலையம், நகர காவல் நிலையம்,புதுப்பேட்டை அணுகு சாலை மற்றும் சேலம்-கிருஷ்ணகிரி அணுகு சாலையில் போக்குவரத்து போலீஸாா் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனா்.